நாட்டிலேயே முதன்முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் ஃபோனில் பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும் தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது.
இணைய சேவை உள்ள ஆன்ட்ராய்ட், வின்டோஸ், ஆப்பிள் உள்ளிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள், கணினிகள், லேப்டாப்கள் ஆகியவற்றில் விங்ஸ் (Wings) எனப்படும் செயலியை நிறுவிவிட்டால் வரம்பற்ற அழைப்புகளை (ஆடியோ, வீடியோ) மேற்கொள்ள முடியும்.
இந்த செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி நிறுவனத்தின் எண்களையும் (லேன்ட்லைன் உள்பட) அழைக்க முடியும். வைஃபை வசதி உடையவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சேவைக்கு சிம் கார்டு அவசியம் இல்லை. எந்தவொரு நெட்வொர்க் வைஃபை மூலமாகவும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த செயலியைப் பெற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் ரூ. 1,099 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது www.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் கட்டணத்தை செலுத்தலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.