அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்
2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுகள் இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதில் எப்போதும், 80 தொகுதிகளைக்கொண்டு உத்தரப்பிரதேசம் முக்கியமான மாநிலமாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி, கர்நாடகாவில் ஜனதா தள் கட்சிக்காக பிரசாரம் செய்தார். அப்போது, ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் நெருங்கும்போது, சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு, கூட்டணிகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை, பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-க்கு அச்சுறுத்தலாக உள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இணைவதையும், முன்னோக்கிச் செல்வதையும் இத்தகைய வகுப்புவாத சக்திகள் விரும்புவதில்லை’ என்று தெரிவித்தார்.
விகடன்