கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அத்துடன் காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியிருந்தார்.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து கூட்டுசதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலைமிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் கைது செய்யவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும், வீட்டில்தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டில், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது கருணாஸ் வீடு முன்பாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏ கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை படுமோசமாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.