திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கடிதம் எழுதி அனுப்பிய மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியையும், அவரது தாயாரையும், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து உரையாடி மகிழ்ந்தார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வாரமாக கவலையில் ஆழ்ந்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் தற்போது உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி மிச்சேல் மிராக்ளின், கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் தமக்கு கலைஞர் தாத்தாவை மிகவும் பிடிக்கும் என்றும். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது மிகுந்த மன வருத்தத்தை தந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் அந்த கடிதத்தில் சிறுமி மிச்சேல் மிராக்ளின் குறிப்பிட்டிருந்தார். இதை படித்து நெகிழ்ச்சி அடைந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு அந்த சிறுமியையும், அவரது தாயாரையும் நேரில் அழைத்து, உரையாடி மகிழ்ந்தார். இதனால் அந்த சிறுமியும், தாயாரும், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்