கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. அப்போது அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இன்னமும் கூட பல பகுதிகளில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில்கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் மறுசீரமைப்பு, புனரமைப்பு மற்றும் எதிர்கால வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழகத்தில் தனி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகளை மறு கட்டுமானம் செய்யவும், பாதித்த இதர உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்திடவும், வேளாண்மை, மீன்பிடி போன்ற தங்களது பொருளாதார பணிகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையிலும் புது திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் நாகப்பட்டினத்தில் இருக்கும். இதற்காக தமிழக அரசு இரண்டு IAS அதிகாரிகளையும் நியமித்துள்ளது. இத்திட்டத்தின் இயக்குனராக டி. ஜெகன்னாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் இயக்குனராக எம். பிரதீப் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது இது போன்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு சுனாமி பாதித்த பகுதிகளில் வசித்த மக்கள் பலர் பயன்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 2004க்கு பிறகு மீண்டும் இதுபோன்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.