பிறரைபோல் எங்களுக்கும் அன்றையதினம் பேரதிர்ச்சி தான்… நம்பிக்கை இழக்கவில்லை. ஏனெனில் பத்திரிகை துறையை கரம் பிடித்து பயணிக்கும் இளைஞர்கள் அதிரை எக்ஸ்பிரஸில் உள்ளனர். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். உள்ளூரில் இருக்கும் அ.எ. நிருபர்களும் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் அ.எ. நிருபர்களும் ஒருங்கிணைந்து பயணமானம். ஆம், அதிரை எக்ஸ்பிரஸின் அவசியத்தை கஜா உணர்த்திய தருணம் அது.
உள்ளூரில் தொடர்பு இல்லை. சில ஜியோ மொபைல்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. அதனூடே எங்களின் சேவை மையம் செயல்பட தொடங்கியது. வெளிநாட்டில் இருக்கும் அதிரையர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து அறிந்து தகவல்களை அளித்தனர் அ.எ. நிருபர்கள். மறுபுறம் மீட்பு, நிவாரண பணிகளையும் இறைவன் அருளால் ஒருங்கிணைத்தோம். இவைகளுக்கு மத்தியில் பலரின் அழுகுரல்களுக்கு ஆறுதல் அளித்தது நம் நிருபர்களின் ஓய்வற்ற உழைப்பு.
தனிநபர் தாண்டி ஒரு குழுவாக பயணிக்கும்போது அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது? உண்மையில் அந்த குழுவினால் இந்த மனித சமூகத்திற்கு பயனுள்ளதா? என்பதை அறிவது அவசியம். அதனை அதிரை எக்ஸ்பிரஸும் உணர்ந்து இருக்கிறது. ஆதலால் “கஜா சமயத்தில் அ.எ செயல்பாடு” குறித்து மக்களிடம் கருத்துக்கேட்டோம்.
வழக்கம்போல் ஒரு கூட்டம் குறைகளை கண்டறிந்து சொல்லும், அதனை திருத்திக்கொண்டு இன்னும் வீரியமாக செயல்படலாம் என்பது தான் மன ஓட்டம். ஆனால் நிகழ்ந்தது வேறு… 361 பேரில் 95% பயனடைந்ததாக வாக்களித்தனர். 5% பயனடையவில்லை… எதிர்கருத்து(?) பதிவும் தென்படவில்லை. மகிழ்ச்சி…
– அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்