ஒட்டு மொத்த டெல்டா மக்களும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அடுத்த வேளை தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவு இருக்காது என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். விடிந்தால் வீடு இருக்காது. கண் விழித்தால் மரம் இருக்காது என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாதொன்றை நிகழ்த்துவதுதானே இயற்கையின் நியதி ?
ஆம் கஜா என்னும் புயல் கோரதாண்டவம் ஆடி ஒட்டு மொத்த டெல்டாவையும் புரட்டிபோட்டுவிட்டது. ஆளுயர வளர்ந்து நின்ற அத்துனை மரங்களும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீழ்ந்து கிடக்கின்றன. கஜாவால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தஞ்சை மாவட்ட கடலோர ஊர்களும் அடக்கம். அதிலும் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகள் வரலாறு காணாத அழிவை சந்தித்தன.
கஜாவால் மல்லிப்பட்டினத்தில் கடந்த மாதம் 15ம் தேதி சென்ற மின்சாரம் இன்று 4ம் தேதி தான் வந்துள்ளது. அதுவும் சில பகுதிகளுக்கு மட்டும். இன்னும் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படவில்லை. அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த பகுதிகளுக்கும் இன்னும் ஓரிரு தினங்களில் மின் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய தேவையான மின்சாரம் இன்றி மல்லிப்பட்டினம் மக்கள் 19 நாட்கள் வாழ்ந்துள்ளனர்.
காலங்கள் மாறினாலும் கஜா புயல் ஏற்படுத்திய வடு மக்கள் மனதில் என்றும் அழியாது !