திமுக தலைவர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கலைஞர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 2010 ம் ஆண்டு தனது 86 வது பிறந்தநாளை கலைஞர் கொண்டாடினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது நான் வாழும் கோபாலபுரம் இல்லம், என்னுடைய மறைவு, எனது மனைவியார் மறைவுக்குப் பின் அங்கு ஏழைகள் பயன்பெறும் இலவச மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும்.
இதற்காக என்னுடைய இல்லத்தை அன்னை அஞ்சுகம்மாள் அறக்கட்டளைக்குத் தானமாக அளித்துவிட்டேன். அந்த மருத்துவமனை என்னுடைய மறைவுக்குப் பின், கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அழைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த 1968 ம் ஆண்டு கோபாலபுரம் இல்லத்தைத் தனது மகன்கள் முக.அழகிரி, முக.ஸ்டாலின், முக.தமிழரசு ஆகியோரின் பெயரில் கருணாநிதி எழுதி வைத்திருந்தார்.
அதன்பின் அவர்களின் சம்மதத்துடன், கடந்த 2009ம் ஆண்டு அந்த கோபாலபுர இல்லத்தை ஏழை மக்களுல்கு மருத்துவமனை அமைக்கத் தானமாக அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.