நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் நாடு முழுவதும் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் `நானும் காவலாளிதான்’ என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘பாதுகாவலன் நரேந்திர மோடி’ என மாற்றியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பா.ஜக. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் தங்களின் பெயருக்கு முன்னால் ‘பாதுகாவலன்’ என்ற வார்த்தையை இணைத்துள்ளனர். இந்த பெயர் மாற்றம் நேற்று முதல் சமூகவலைதளத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில் ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர் நஜீப் அகமது எங்கே ? என அவரின் தாய் பாதுகாவலன் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி பதிவிட்ட பாதுகாவலன் ட்வீட்டை டேக் செய்து நஜீப்பின் தாய் பாத்திமா நஃபீஸ் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் பாதுகாவலன் என்றால் என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். என் மகன் நஜீப் எங்கே ? ஏன் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை. என் மகனைக் கண்டுபிடிக்கும் விசாரணையில் மூன்று உயர்மட்டக் குழுக்களும் ஏன் தோல்வியடைந்தன?” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி ஜே.என்.யூ மாணவர் நஜீப் அகமது காணாமல் போனார். ஏ.பி.வி.பி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என ஜே.என்.யூ மாணவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்னர் இவரைத் தேடும் பணியில் போலீஸ் இறங்கியது. நீண்ட விசாரணைக்குப் பிறகும் நஜீப் காணாமல் போன தகவல் கிடைக்காததால், பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையிலும் நஜீப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நஜீப் அகமது காணாமல் போய் மூன்று வருடங்கள் ஆன நிலையிலும் அவரின் நிலை பற்றி இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.