குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில், இணை ஆணையர் தினகரன் தலைமையிலான போலீசார், இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தினர்.
மேலும் போராட்டக் களத்திற்கு வந்த தலைவர்களும் இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருந்தும் பெண்கள் முன்னின்று தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராடி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 14-ஆம் தேதி இரவை கருப்பு இரவாக்கிய போலீஸாருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக சித்தரிக்க காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. அமைதி வழியில் போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது.
கைது செய்யபட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தை அரசு கடைபிடிக்க வேண்டும் என தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.