சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில்j கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக் கோரி நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர். முன்னதாக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி காட்டிய திமுகவை சேர்ந்த 293 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று திமுக சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை கோர்ட் அருகில் காலை 8 மணி முதல் குவிய தொடங்கினர். காலை 10.10 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.